நகர் துஞ்சும் நல்யாமம் - புதுக்கவிதை.
ஒரு மிடறு உயிரின் திரட்சி.
உள் நெளியும் அரவமென
நுனி முதல் தலைவரை சுருண்டிருக்கிறது.
ஒவ்வொரு மிடறாய் விட்டு
உயிர் கொஞ்சம் கொஞ்சமாய்க் கோப்பையில் நிரம்புகிறது.
நிகழ்வுக் குமிழிகள் கொப்பளித்துக் கொப்பளித்துக் கோப்பையின்
மெல்லிய விளிம்பில்
இரத்தக் கவிச்சியுடன் மோதுகின்றன.
ஒவ்வொரு மிடறிலும் ஒரு துளி வாழ்வு.
நீ குடித்ததும் நான் குடித்ததும்
கடந்து போன முன் பிறவிகளின் எச்சங்கள்.
போனமுறை குடித்த மிடறு
புளித்த ஏப்பமாய் வருகிறது.
இந்த முறை உன் விஷம் தடவிய உதட்டில் எச்சில் துப்பித் தா
குடித்து விட்டுக் கடவுளாகிறேன்.
நீ மட்டும் வனாந்தரப் பிசாசாய் அலைந்து கொண்டிரு.
நம் காதல் துமிளிகள்
கடலில் கரைகின்றன.
இருவருமாய்ச் சேர்ந்து
உறிஞ்சிக் குடிக்கலாம்
அல்லது அருந்திச் சாகலாம்.
ஈதலும் ஈதலுமே வாழ்வு.
சீக்கிரம் வா.
நகர் துஞ்சும் நல்யாமம் தகித்திருக்கிறது.
(துமிளி- நுரை)
கவிஞர் ஜனமித்திரன்.
இணைப்பேராசிரியர்,
மதுரை.
98423 65323
07.06.2021.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக